2023-ம் ஆண்டு உலக கிண்ணத்தை வெல்வதே தனது இலட்சியம் என்று நியூசிலாந்து அணியின் மூத்த வீரர் ரோஸ் ரெய்லர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான நியூசிலாந்தின் சிறந்த வீரராக முன்னணி துடுப்பாட்ட வீரர் ரோஸ் டெய்லர் தேர்வு செய்யப்பட்டார். சேர் ரிச்சர்ட் ஹேட்லி பதக்கத்தை 3-வது முறையாக ரோஸ் டெய்லர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விருதுக்குரிய காலகட்டத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியையும் சேர்த்து 2 சதம் மற்றும் 9 அரைச்சதம் உள்பட ஆயிரத்து 389 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி முதல் முறையாக ஒன்-லைன் மூலம் நடைபெற்றது.
மூன்றாவது தடவையாக நியூசிலாந்தின் சிறந்த வீரருக்கான விருதை பெற்ற 36 வயதான ரோஸ் ரெய்லர் கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறுகையில்,
ஏற்றம், இறக்கம் நிறைந்தது என்றாலும் 2019-20 ம் ஆண்டு சீசன் எனக்கு வியப்புக்குரியதாகவே அமைந்திருக்கிறது. உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆடினேன். அவுஸ்ரேலியாவில் பொக்சிங் டே டெஸ்ட்டில் பங்கேற்றது பெருமைமிக்க தருணம். அப்போது அங்கு நியூசிலாந்து ரசிகர்கள் அளித்த ஆதரவை ஒரு போதும் மறக்க முடியாது. தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை. 2023-ம் ஆண்டு உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எனது ஆசை. உத்வேகமும், மன ரீதியாக தொடர்ந்து வலுவாக இருக்கும் போது 2023-ம் ஆண்டு உலக கோப்பையில் என்னால் ஆட முடியும்.
அதன்பிறகு வயது வெறும் நம்பர்தான். 2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை தொடர்ந்து விளையாட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்னும் எனது ஆட்டத்தில் முன்னேற்றம் காண விரும்புகிறேன் என ரோஸ் ரெய்லர் மேலும் கூறியிருந்தார்.
Category: விளையாட்டு, புதிது
Tags: நியூசிலாந்து